விஜய் பாணியில் மாணவர்களுக்கு உதவித்தொகை... ரஜினி ரசிகர்கள் அறிவிப்பு!!

 

நடிகர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியது போல், தாங்களும் வழங்க இருப்பதாக ரஜினி ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த 6-ம் தேதி வெளியானது. அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள காவாலா என்ற பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடல் குறித்து விமர்சனங்கள் அதிகம் இருந்தாலும் அதே அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவும் தவறவில்லை. இதனையடுத்து இந்தப் படத்திலிருந்து ஹுக்கும் என்ற பாடல் இன்று (ஜூலை 17) வெளியாகிறது.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தை வெற்றி படமாக ஆக்குவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் விஜய் ஆனந்த் மாவட்ட வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநகரம், நகரம், ஒன்றியம் உள்ளிட்ட மாவட்ட முழுவதும் இருந்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயிலர் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக ஆக்க ரசிகர்கள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்பட்டது. படம் திரையிடப்படும் ஆகஸ்ட் 10-ம் தேதி தூத்துக்குடி மாநகர முழுவதும் விழாக்கோலம் காணும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் ஜெயிலர் படம் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பல்வேறு உதவிகள் வழங்கும் வகையில் ரூபாய் நாலரை லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி ஜெயபால் லட்சுமணன் கண்ணன் மாநகர செயலாளர் வெலிங்டன் மாவட்ட மீனவர் அணி அருள் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.