ரூ. 9 லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின் விளக்கு.. சொந்த ஊருக்காக இளையராஜா செய்த செயல்!

 

இளையராஜா தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9 லட்சம் ரூபாய் செலவில் கூடலூரில் அமைத்துக் கொடுத்த மின்விளக்கு குறித்த செய்தி வைரலாகி உள்ளது.

இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் இவர், இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்றவராக விளங்குகிறார். 1976-ல் வெளியான ‘அன்னக்கிளி’ படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் காலடி எடுத்துவைத்த அவர், இதுவரை 950-க்கும் மேற்பட்ட படங்களில் 4,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது பல படங்களில் பிசியாக இருக்கும் இசைஞானி இளையராஜா அரசியலிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார். தனது சொந்த மாவட்டமான தேனியில் கூடலூர் நகராட்சியில் 16 மீட்டர் உயர் கோபுர விளக்கை அமைத்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9 லட்சம் ரூபாய் செலவழித்து இந்த மின்விளக்கு கோபுரத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், மின்விளக்கு வைக்கப்பட்டது குறித்த கல்வெட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. எம்.பி. பதவியை நல்ல முறையில் பயன்படுத்தி மக்களுக்கு பயனுள்ள வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இளையராஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினார். இதனையடுத்து இளையராஜாவை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கியது. எம்.பி. ஆனதும் இளையராஜாவிற்கு கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. ஒன்றிய அரசு அவருக்கு கௌரவம் செய்துவரும் நிலையில் அவரும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.