ராவணனாக நடிக்க ரூ.150 கோடி சம்பளம்.. நடிகர் யார் தெரியுமா?

 

ராவணனாக நடிக்க நடிகர் யாஷ் சம்பளமாக ரூ. 150 கோடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராமாயண கதை, ஏற்கனவே படமாக எடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் இப்போது ராமாயணக் கதையை சிலர் படமாக்கி வருகின்றனர். அந்த வகையில், பிரபல பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை 3 பாகங்களாகத் திரைப்படமாக இயக்க இருக்கிறார். இதில் ராமராக ரன்பீர் கபூரும் ராவணனாக யாஷும் நடிக்க இருக்கின்றனர். 

சீதையாகச் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். முதலில் ஆலியா பட் சீதையாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் விலகியதால், சாய் பல்லவி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. நடிகர் யாஷ், ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படுகின்றன. 

இந்தப் படத்தில் நடிக்க நடிகர் யாஷ் சம்பளமாக ரூ.150 கோடி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் கால்ஷீட் எத்தனை நாள் தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்தச் சம்பளம் மாறும் என்று பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.

2022-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த கேஜிஎஃப்-2 படத்தினை அடுத்து யாஷ் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.