‘கங்குவா’ படப்பிடிப்பில் ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா!

 

‘கங்குவா’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த படம் 9ம் நூற்றாண்டில் தொடங்கி 21ம் நூற்றாண்டு வரை தொடர்வது போல் கதை எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் ‘கங்குவா’ படத்தின் சண்டைக்காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததாகவும் இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.