பிரபல சின்னத்திரை நடிகையின் இரட்டை குழந்தைகள் பெயர் சூட்டு விழா.. ரசிகர்கள் வாழ்த்து! வைரல் வீடியோ

 

பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது.

2007-ல் அஜித் நடிப்பில் வெளியான ‘ஆழ்வார்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்வேதா பண்டேகர். இந்தப் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, நான் தான் பாலா உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஸ்வேதா பண்டேகர் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் 2009-ம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நடித்து வரும் ஸ்வேதா பண்டேகர் சன்டிவியின் மகள் சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சந்திரலேகா தொடரில் நடித்தார். இந்த சீரியலில் 2 வேடங்களில் நடித்த ஸ்வேதா பண்டேகர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்தார். மேலும் ஜீ தமிழின் லட்சுமி வந்தாச்சு என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள ஸ்வேதா பண்டேகர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பல விளம்பர படங்களில் நடித்துள்ள ஸ்வேதா பண்டேகர், சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்த மால் மருகா என்பரை 10 ஆண்டுகள் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய ஸ்வேதா பண்டேகர், தனது கணவருடன் இணைந்து போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்தப் புகைப்படங்கள் வைரலான நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தது.

இந்த நிலையில், தங்களது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருந்தனர். மகனுக்கு கிரிதன் கிருஷ்ணா என்றும் மகளுக்கு சர்வஸ்ரீ என்றும் பெயர் வைத்திருந்தனர். மேலும், முதல் முறையாக தங்களது குழந்தைகளின் புகைப்படங்களையும் இந்த தம்பதி பகிர்ந்துள்ளது. ரசிகர்கள் குழந்தைகளுக்குத் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.