பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

பிரபல காமெடி நடிகர் சேசு இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகத்திற்கு பிரபலமடைந்தவர் ஷேசு. இவர், தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதே இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படங்களில் சின்ன வேடமாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து இவருக்கு பிரபலம் கிடைத்தது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தான்.

லொள்ளு சபா நிகழ்ச்சியில் இவருடைய டைமிங் காமெடி மூலமாகவே இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. அதிலும் குறிப்பாக சந்தானத்தோடு இவர் A1 திரைப்படத்தில் நடித்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு இருந்தது. அதிலும், “நான் யாருன்னு என்கிட்ட கேட்கிறதை விட, வேற யாருகிட்டயாவது போய் நான் யாருன்னு கேட்டு பாரு.. அச்சச்சோ அவரா பயங்கரமான ஆளாச்சே.! அவர் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா என்று சொல்லுவாங்க...” என்னும் டயலாக் வேற லெவலில் டிரெண்டானது.

அது போன்று பல திரைப்படங்களிலும் இவருடைய காமெடி பல பேரை ரசிக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் இவர் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ச்சியாக லொள்ளு சபா, காமெடி பேட்டை என்ற நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் தான் சம்பாதிக்கும் பணத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்து வரும் சேசுவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்புவரைக்கும் சேசு சில பேட்டிகளில் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். அதுபோல தன்னுடைய ரசிகர்களிடமும் பிரபலங்களிடமும் தங்களால் முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

இப்படியான நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருக்கும் செய்தியை கேட்டு பலரும் அவர் விரைவில் நலம் பெற்று மீண்டும் பலரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வேண்டி வருகின்றனர்.