‘பிசிஓஎஸ்’ என்ற அரிய வகை நோய்.. வேதனையில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்!

 

‘பிசிஓஎஸ்’ என்ற அரிய வகை நோயால் அவதிப்படுகிறேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

1992-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற போற்றிப் பாடடி பெண்ணே பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் 2000-ம் ஆண்டு வெளியான ‘ஹே ராம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனார். பின்னர் 2011-ல் ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹிரோயினாக அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததை அடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷய், அஜித், விஷால், தனுஷ் போன்றோர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கணிசமான படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழில் அவருக்கு வாய்ப்பு குறைந்ததை அடுத்து, தெலுங்கு பக்கம் சென்று அங்கு கணிசமான படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ‘இனிமேல்’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுத, பாடலுக்கு ஸ்ருதி ஹாசன் இசையமைத்திருந்தார். இசையமைத்ததோடு மட்டுமன்றி அதில் நடித்தும், பாடியும் இருந்தார். அவருடன் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் இதில் நடித்திருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றதை தொடர்ந்து, அவர் தொடர்ந்து தனது இசை பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். தற்போது, இவர்கள் தங்களின் காதலை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரியவகை வியாதியால் அவதிப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, “நான் ‘பிசிஓஎஸ்’ என்ற அரிய வகை நோயால் அவதிப்படுகிறேன். இதனால் மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்டு வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை. இதன் காரணமாக நிறைய விஷயங்களை இழந்து இருக்கிறேன். கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் எனக்கு இருக்கும் பிரச்சினையை சொல்லி படப்பிடிப்பை இன்னொரு நாளில் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல முடியாது. வேதனையை பொறுத்துக்கொண்டு படங்களில் சண்டை காட்சியானாலும், பாடல் காட்சிகளானாலும் சிரித்தபடி நடித்து வருகிறேன்” என்றார்.