‘பத்து தல’ பட உதவி இயக்குநர் திடீர் மரணம்.. கண்ணீர் மல்க விடைகொடுத்த இயக்குநர் கிருஷ்ணா!

 

பத்து தல படத்தின் உதவி இயக்குநர் சரவணன் சிகிச்சை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2006-ல் சூர்யாவை வைத்து ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் ஒபெலி. என். கிருஷ்ணா. அந்த படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ஆரி அர்ஜுனனை வைத்து நெடுஞ்சாலை படத்தை இயக்கினார். அந்த படமும் பெரிதாக கைகொடுக்க வில்லை.

இந்த நிலையில், கடைசியாக கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்து வெளியான மஃப்டி படத்தை தமிழில் சிம்புவை வைத்து பத்து தல என ரீமேக் செய்திருந்தார். ஆனால், அந்த படமும் பெரிய ஹிட் அடிக்கவில்லை. அந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் சரவணன்.

கடந்த ஆண்டு இறுதியில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக உதவி இயக்குநர் சரவணன் உயிருக்குப் போராடும் சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாத அளவுக்கு மோசமடைந்த நிலையில், பரிதாபமாக இளம் வயதிலேயே சரவணன் உயிரிழந்து விட்டார்.

பத்து தல படத்தின் உதவி இயக்குநநர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் நடிகர் சிம்புவுக்கு எட்டிய நிலையில் உடனடியாக அவரது மருத்துவ செலவுக்காக ஒரு லட்சம் ரூபாயை சிம்பு கொடுத்து கடந்த டிசம்பர் மாதம் உதவியிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தது சினிமா வட்டாரத்தில் பல பிரபலங்களையும் நடிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஒரு இயக்குநருக்கு முக்கியமான கைகளாக இருப்பவர்களே உதவி இயக்குநர்கள் தான். அதில், ஒருவர் உயிரிழந்தால் அது நிச்சயம் அந்த இயக்குநருக்கு பேரிழப்பை தரும். அதுவும் இயக்குநராகும் கனவுகளுடன் படங்களில் பணியாற்றி வந்த இளம் உதவி இயக்குநரின் மறைவு அவரது குடும்பத்திற்கு பேரிழப்பாக மாறியிருக்கிறது. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் கிருஷ்ணா குட்பை சரவணா என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார். சிம்பு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.