பிரபல இயக்குநர் ஹரியின் தந்தை மரணம்... திரையுலகினர் அஞ்சலி!

 

பிரபல இயக்குநர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 88.

2002-ல் பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஹரி. அதனைத் தொடர்ந்து, சாமி, கோவில், அருள், ஐயா, சிங்கம், உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஷாலின் 34வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று (அக். 21) காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று காலை கோபாலகிருஷ்ணனின் உயிர் பிரிந்தது. அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டு, பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும்.

இந்நிலையில் இயக்குநர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் மறைவிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இயக்குநர் ஹரி என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் பற்றும் கொண்டவர். தந்தையை இழந்து வாடும் இயக்குநர் ஹரிக்கும், அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.