பிரபல கலை இயக்குநர் தூக்கிட்டு தற்கொலை.. திரையுலகினர் அதிர்ச்சி!

 

பிரபல பாலிவுட் கலை இயக்குநர் நிதின் தேசாய் திடீரென தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமீர்கான் நடித்த ’லகான்’ ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் நடித்த ’தேவதாஸ்’ ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜோதா அக்பர்’ உள்ளிட்ட பல பிரமாண்டமான படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியவர் நிதின் தேசாய் (57).

இந்த நிலையில், நிதின் தேசாய் மும்பை கர்ஜத் பகுதியில் உள்ள தனது ஸ்டுடியோவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆகஸ்டு 9-ந் தேதி அவர் தனது 58-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், திடீரென இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அலுவலகத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்த நிதின் தேசாயின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணயும் மேற்கொண்டுள்ளனர்.

நிதின் தேசாயின் மறைவுக்கு நிதி நெருக்கடி தான் காரணம் என கர்ஜத் பகுதி எம்எல்ஏ மகேஷ் பல்டி கூறியுள்ளார். அவர் பல நாட்களாக நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வந்ததாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

’டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்’, ’ஹம் தில் தி சுகே சனம்’, ‘லகான்’ மற்றும் ’தேவதாஸ்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக கலை இயக்குனராக பணியாற்றியதற்கு அவர் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.