தேசிய விருது வென்ற பிரபல இயக்குனர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!!

 

பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 77.

1971-ல் பிலிம் இன்சிடிடியூட்டில் டிப்ளமா பட்டம் பெற்ற கே.ஜி.ஜார்ஜ், 1972-ல் வெளியான ‘மாயா’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இனை இயக்குநராக அறிமுகமானார். அதன்பின், 1976-ல் வெளியான ‘ஸ்வப்நதானம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதை வென்றது.

தொடர்ந்து வியாமோஹம், ராப்படிகளுடே கதா, இனியவள் உறங்கத்தே, ஒனப்புடவ, மன்னு, யவனிகா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். கிளாசிக் ஹிட் அடித்த யவனிகா படத்துக்கு மாநில விருது கிடைத்தது. இவர் சினிமாவில் பணியாற்றிய நாற்பது வருடங்களில் 19 படங்களை இயக்கியுள்ளார்.

மலையாள திரையுலகில் நடிகர், எழுத்தாளர், இயக்குநர், டப்பிங் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்தவர் கே.ஜி.ஜார்ஜ். வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் இன்று இயற்கை எய்தினார். கே.ஜி.ஜார்ஜ் கொச்சியில் உள்ள முதியோர் மையத்தில் சில காலமாக வசித்து வந்தார். பலமுறை மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

பழம்பெரும் இயக்குனர் கே.ஜி.ஜார்ஜின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த இயக்குனர் கே.ஜி.ஜார்ஜின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.