மீண்டும் இணையும் மாமன்னன் கூட்டணி.. நடிகர் வடிவேலுவை வைத்து சம்பவம் செய்யுள்ள மாரி செல்வராஜ்!

 

மாமன்னன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. இந்தப் படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளிக்கப்பட்டது. திரையரங்கில் வெளியான ஒரே வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படம் தற்போது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. இரண்டாவது வாரத்திலும் தமிழ்நாட்டில் 470-க்கும் மேற்பட்ட திரைகளில் மாமன்னன் வெற்றிகரமாக ஓடி வருவதால் இந்த வாரமும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தெலுங்கிலும் இப்படத்தை டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய உள்ளனர். அண்மையில் இதன் டிரெய்லரை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மற்றும் இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் ரிலீஸ் செய்தனர். இப்படம் தெலுங்கில் வருகிற ஜூலை 14-ம் தேதி திரைக்கு வர உள்ளதால் அங்கும் வசூல் சாதனை நிகழ்த்த வாய்ப்புள்ளது.

மாமன்னன் படத்தின் தாக்கமே இன்னும் ஓயாத நிலையில், அப்படத்தின் தூணாக இருந்த வடிவேலுவும், இயக்குநர் மாரி செல்வராஜும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 1997-ம் ஆண்டு வெளிவந்த ‘லைஃப் இஸ் பியூட்டிபுல்’ என்ற இத்தாலிய திரைப்படத்திற்காக தான் வடிவேலுவும், மாரி செல்வராஜும் மீண்டும் இணைய உள்ளார்களாம். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.