வீட்டில் சடலமாக கிடந்த பிரபல மலையாள இயக்குநர்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

 

பிரபல இயக்குநர் பிரகாஷ் கொலேரி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1987-ல் வெளியான ‘மிழிதளில் கண்ணீருமே’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரகாஷ் கோலேரி (65). 1994-ம் ஆண்டு ரமேஷ் அரவிந்த் நடிப்பில் வெளிவந்த ‘அவன் அனந்தபத்மநாபன்’, ‘தீர்க்கசுமங்கலிபவ’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு இறுதியாக ‘பாட்டு புஸ்தகம்’ என்ற படத்தை அவர் இயக்கியிருந்தார்.

அதன் பின்னர் திரைத்துறையில் படங்களை இயக்காவிட்டாலும் கூட, பாடல்கள் எழுதுவது, திரைக்கதை எழுதுவது ஆகிய பணிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். இவருடைய பெற்றோரான குமரன், தேவகி ஆகியோர் மறைந்த பிறகு, வயநாடு அருகே உள்ள பரப்பனங்காடி சாலையில் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதனிடையே கடந்த 2 நாட்களாக வீட்டை விட்டு பிரகாஷ் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிய போதும், அவர் கிடைக்கவில்லை. இதனால் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே பிரகாஷ் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கெனிச்சிரா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரடைப்பு காரணமாக பிரகாஷ் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பிரகாஷ் கோலேரியின் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.