நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘லியோ’ வெற்றி விழா! விஜய் ரசிகர்கள் உற்சாகம்

 

விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவை வரும் நவம்பர் 1ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் கடந்த 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், ‘லியோ’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் ரூ. 461 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விஜய் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார்.