உலகம் முழுவதும் 3 நாட்களில் ‘லியோ’ ரூ.250 கோடி வசூல்

 

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் கடந்த 19-ம் தேதி வெளியானது. அண்டை மாநிலமான கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாத காரணத்தால் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் ‘லியோ’ திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று திரை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்து விடுமுறை நாட்களால் படத்தின் வசூல் கூடியதையடுத்து, 3 நாட்களில் உலக அளவில் படம் ரூ.250 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டும் 3 நாட்களில் படம் ரூ.32 கோடியை வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.