அசோக் செல்வனுடன் கீர்த்தி பாண்டியன் மன்றல் விழா.. வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

 

நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2013-ல் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் இவருக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதனை தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, சவாலே சமாளி, மன்மத லீலை, ஹாஸ்டல்,சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சரத்குமார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விமர்சனரீதியாக மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. பா.ரஞ்சித் தயாரித்துவரும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் திருமணம் வருகிற செப்டம்பர் 13-ம் தேதி நெல்லையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட இருப்பதாகவும் பின்னர் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிகிறது. நடிகர் அருண் பாண்டியனுக்கு கவிதா, கிரானா, கீர்த்தி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். ஏற்கனவே இவரின் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. நடிகை கீர்த்தி பாண்டியன் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்களது திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலியில் இவர்களது கல்யாணம் நடைபெற இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.