கணவரை என்னுடன் சேர்த்து வையுங்க.. பிரபல சின்னத்திரை நடிகை தீபா நீதிமன்றத்தில் மனு

 

தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனக்கூறி பிரபல சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தீபா. இவர் அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமாகி உள்ளார். இவருக்கு திருமணமான நிலையில கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு தீபா 2வது திருமணம் செய்து கொண்டார். கணேஷ் பாபு என்பவரை அவர் 2வது திருமணம் செய்தார்.

தீபாவும், கணேஷ் பாபுவும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். கணேஷ் பாபுவும் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது அவருக்கும், தீபாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாகி திருமணத்தில் முடிந்தது.

திருமணத்துக்கு பிறகு கணேஷ் பாபுவும், தீபாவும் தனியே வசித்து வந்துள்ளனர். தீபாவின் வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் கணஷ் பாபு தற்போது தீபாவை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தீபா சார்பில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அந்த மனுவில், “நானும், எனது கணவர் கணேஷ் பாபுவும் காதல் திருமணம் செய்தோம். எனது கணவரின் சகோதரர் ராமகிரி வாசன் மனரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் சாதி ரீதியாக என்னை இழிவுப்படுத்தினர். இதனால் கணவருக்கும், எனக்கும் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது அவர் பிரிந்து போய் உள்ளார். குடும்பத்தினரின் அழுத்தத்தால் பிரிந்துள்ள கணவர் என்னுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறார். இதனால் எங்களை சேர்த்து வைக்க வேண்டும்” என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.