பிரபல கன்னட நடிகர் கார் மோதி பெண் பரிதாப பலி.. அடுத்து நடந்த அதிரடி!

 

கர்நாடகாவில் நடைப்பாதையில் நடந்து சென்ற தம்பதி மீது பிரபல கன்னட நடிகர் நாகபூஷணாவின் கார் மோதியதில், பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20018-ல் வெளியான ‘சங்கஷ்ட கர கணபதி’ என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர்  நாகபூஷணன். அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார். இதில், கௌசல்யா சுப்ரஜா ராமா, டேர்டெவில் முஸ்தபா, படவா ராஸ்கல், இக்கத், மேட் இன் சீனா போன்றவை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, அவர் தனது இக்கத் படத்திற்காக SIIMA விருதில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், பெங்களூரில் உள்ள வசந்த புரா மெயின் ரோட்டில் நடைபாதையில் நடந்து சென்ற தம்பதி மீது நாகபூஷணா மோதியுள்ளார். சம்பவம் நடந்தபோது டகரு பால்யா படத்தின் நடிகர் உத்தரஹள்ளியில் இருந்து கோனானகுண்டேக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நாகபூஷணா முதலில் தம்பதியினரை இடித்துவிட்டு பின்னர் மின்கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது.

விபத்துக்குப் பிறகு, நாகபூஷணா தான் தம்பதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், 48 வயதான பிரேமா என்ற பெண் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அதே நேரத்தில் கிருஷ்ணா என்று அடையாளம் காணப்பட்ட 58 வயதுடைய நபருக்கு கால்கள், தலை மற்றும் வயிற்றில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. குமாரசாமி போக்குவரத்து காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் பற்றி மேலும் கிடைத்த தகவலின் படி, வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக நாகபூஷணா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து நாகபூஷணா இன்னும் எந்த அதிகாரபூர்வ அறிக்கையையும்  வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விபத்து கடந்த சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் நடைபெற்றுள்ளதாக  இந்தியா டுடே தெரிவித்துள்ளது.