லியோ படம் குறித்து முக்கிய அப்டேட்.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

 

6 மாதங்களாக நடைபெற்ற்று வந்த விஜயின் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் 22-ம் தேதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதனைத் தொடர்ந்து, விஜய் பாடியுள்ள ‘நா ரெடி’ பாடல் வெளியானது. விஷ்ணு எடவன் எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய்யுடன் இணைந்து அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோர் பாடியுள்ளனர்.

காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், 6 மாதங்களில் 125 நாட்கள் படப்பிடிப்பு! இந்தப் படத்தில் தங்கள் ஆன்மாவை ஈடுபடுத்திக் கொண்ட நடிகர்கள் மற்றும் படக் குழுவினருக்கு நன்றி. இந்தப் பயணம் மீண்டும் என் இதயத்துக்கும் தனிப்பட்ட வகையில் மிகவும் நெருக்கமானதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.