இந்த ஜென்மத்தில் அவருடன் சேரமாட்டேன்.. SK மீது கடும் கோபத்தில் டி.இமான்!

 

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவரது படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்றும் இசையமைப்பாளர் டி.இமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் சிவகார்த்திகேயன். இவர் 2012-ம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மான் கராத்தே, எதிர்நீச்சல், ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, ஹீரோ, டாக்டர், பிரின்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சிக்கு அவரது படங்கள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்ததோ, அதில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட் ஆனதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் பெரும்பாலானவற்றிற்கு அனிருத் அல்லது டி இமான் தான் இசையமைத்து இருப்பார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் அவரின் படங்களுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து அவரை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்ற பெருமை இசையமைப்பாளர் டி.இமானையே சேரும்.

இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இசையமைப்பாளர் டி.இமான் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தனிப்பட்ட காரணங்களால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. எனவே எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது. ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அதற்கான அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது” என்று கூறியுள்ளார்.