ரசிகர்கள் ஷாக்..! சினிமாவிலிருந்து விலகும் சமந்தா..? இதுதான் காரணமா?

 

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திரைத்துறையில் நீண்ட இடைவெளி எடுக்க முடிவு செய்து உள்ளார்.

2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, நடித்து வந்த ‘குஷி’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவர் குணமடைந்த பின், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அதில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மீண்டும் நடித்தார் சமந்தா.

இதையடுத்து நடிகை சமந்தா நடிப்பில் சிட்டாடெல் என்கிற வெப் தொடரும் தயாராகி வருகிறது. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே சமந்தா நடித்த பேமிலி மேன்2 வெப் தொடரை இயக்கியவர்கள். இந்த வெப் தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. சிட்டாடெல் வெப் தொடரின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை சமந்தா குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி சிட்டாடெல் வெப் தொடரில் நடித்து முடித்த பின்னர் நடிகை சமந்தா சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாராம். இந்த முடிவு தற்காலிகமானது தானாம். இதனால் தற்போது படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் உள்ள சமந்தா, வரும் வாய்ப்புகளையும் நிராகரித்து வருகிறாராம். சுமார் ஓராண்டு காலத்துக்கு அவர் சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளாராம். இந்த ஓராண்டு காலத்தில் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்து முழுமையாக உடல் நலன் தேறிய பின்னரே மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஐடியாவில் சமந்தா உள்ளாராம்.