பிரபல தமிழ் நடிகர் மீது கொடூர தாக்குதல்.. மர்ம கும்பலால் பரபரப்பு..!

 

பிரபல திரைப்பட நடிகர் மோகன் சர்மாவை சரமாரியாக தாக்கி காயப்படுத்திய அடையாளம் தெரியாத நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

1974-ல் வெளியான ‘அக்கரை பச்சை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மோகன் சர்மா. தொடர்ந்து ஏணிப்படிகள், தூண்டில் மீன், உயிரோடு உயிராக, கண்ணெதிரே தோன்றினாள், அப்பு, ப்ரண்ட்ஸ், சச்சின் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கோலங்கள், தாலட்டு, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள இவர், சில படங்களையும் தயாரித்துள்ளார்.

இவர், சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தி.நகர் சென்று விட்டு தனது வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருக்கம் போது ஹாரிங்டன் சாலை பத்தாவது அவென்யூ சந்திப்பில் மர்ம நபர்கள் சிலர் நடிகர் மோகன் சர்மாவை வழிமறித்து கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் நடிகர் மோகன் சர்மாவுக்கு இரண்டு கண்களுக்கு கீழே காயமும், கால் மற்றும் கால் முட்டிகளில் சிராய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மோகன் சர்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நடிகர் மோகன் சர்மா, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில், மர்ம நபர்கள் தன்னை தாக்கியது குறித்து புகார் அளித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் முன்விரோதம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, மோகன் சர்மா போயஸ் கார்டனில் தனக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை விற்க, கடந்த வருடம் தனியார் நிறுவனத்தில் விளம்பரம் செய்திருந்தாராம். எனவே, சேகரன், அவரது மகன் கிருஷ்ணகுமார் ஆகிய 2 புரோக்கர்கள் மூலம் மருத்துவர் ராஜா ரமணன் என்பவருக்கு, கடந்த வருடமே இந்த வீட்டை விற்பனையும் செய்திருக்கிறார்.

ஆனால், வீட்டை விற்பனை செய்த நாள் முதல், இடைத்தரகர்கள் 2 பேருமே அத்துமீறி நுழைந்து வீட்டில் குடியிருந்து வருவதாக மோகன் சர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனால்தான், மோகன் சர்மாவுக்கும், புரோக்கர்களுக்குமிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்தே, மோகன் சர்மா காரில் சென்றபோது அவரை தாக்கியாக தெரிகிறது.

தன்னை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ள நிலையில், போலீசாரும் அது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்து, மூக்கில் கட்டுப்போட்டு சிகிச்சை பெற்று வரும் மோகன் சர்மாவின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.