பிரபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்.. முதல்வர் மற்றும் திரையுலகினர் இரங்கல்!

 

பிரபல மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் அச்சானி ரவி காலமானார். அவருக்கு வயது 90.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கே. ரவீந்திரநாத் நாயர் என்பவர் ஜெனரல் பிக்சர்ஸ் என்கிற பெயரில் படங்களை தயாரித்து வந்தார். 1967-ல் வெளியான ‘அன்வேஷிச்சு கண்டேதியில்லா’ என்ற மலையாள படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அவர் தயாரிப்பில் வெளிவந்த அச்சானி என்கிறப் படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் ரவிந்திரநாத் நாயர் என்கிற அவரது பெயர் அச்சானி ரவி என்று மாறியது.

இவர், காஞ்சனா சீதா, கும்மட்டி, தம்பு, எஸ்தப்பன், பொக்குவெயில், எலிப்பத்தையம் , மஞ்சு, அந்தரம் , விதேயன் ஆகிய முக்கியமானப் படங்களைத் தயாரித்துள்ளார்.  தனது மொத்த தயாரிப்பு வாழ்க்கையில் 20 தேசிய விருதுகளை வென்றுள்ளார். தனது வாழ்நாள் சாதனைக்காக  கேரள மாநிலத்தின் கெளரவ விருதையும் வென்றுள்ளார்.

இவர், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த தொழிலதிபராகவும் இருந்தவர். ஒரு நல்ல தொழிலதிபரின் மகனாக பிறந்த ரவி, தனது தந்தை வழியில் முந்திரி வணிகத்தை எடுத்து நடத்தி வந்தார். விஜயலக்‌ஷ்மி கேஷ்யூஸ் என்கிற அவரது நிறுவனம் கேரள மாநிலத்தில் சிறந்த தரமான முந்திரிகளை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று.  மேலும் ஒரு சமூக சேவகராகவும் அறியப்பட்டவர் ரவி, கொல்லத்தில் தனது சொந்த செலவில்  நூலகம் ஒன்றை கட்டி அமைத்துக் கொடுத்தார்.

இந்த நிலையில், கொல்லத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த அச்சானி ரவி, வயது மூப்பு காரணமாக கடந்த 8-ம் தேதி காலமானார். அவரது மனைவியான உஷா ராணி ஒரு பிரபல பாடகரும் கூட. கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அவரது இறப்பைத் தொடர்ந்து அவரது மகன்கள் பிரதாப் நாயர், பிரகாஷ் நாயுர் மற்றும் மகள் ப்ரீதா நாயர் ஆகியோர் அவரது இறுதி சடங்கில் கலந்துகொண்டனர்.

கேரள முதல்வர் பிரணாயி விஜயன், அச்சானி ரவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். அவர் மட்டுமன்றி, பல கேரள திரைப்பிரபலங்களும் இயக்குநர்களும் அச்சானி ரவி தயாரித்த படங்கள் குறித்தும் அவர் பிறரிடம் பழகிய விதங்கள் குறித்தும் நினைவு கூர்ந்து வந்தனர்.