70 வயதில் பீமரத சாந்தி திருமணம் செய்யும் பிரபல காமெடி நடிகர் செந்தில்..! வைரல் புகைப்படங்கள்..

 

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் செந்தில், தமது 70வது வயதை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பீமரத சாந்தி திருமண விழாவில் பங்கேற்றுள்ளார்.

1979-ல் வெளியான ‘ஒரு கோவில் இரு தீபங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் செந்தில். அதன்பின், சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு, 1983-ல் வெளியான ‘மலையூர் மம்பட்டியான்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இவர் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 

குறிப்பாக கவுண்டமணியுடன் இணைந்து நடித்த வாழைப்பழம் காமெடி, கால் புல் அரைப்புல் காமெடி இதேபோல் ரஜினியுடன் இணைந்து மாப்பிள்ளை இவர்தான் காமெடி என பல எவர்கிரீன் காமெடிகளில் நடித்துள்ள நடிகர் செந்தில் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். 1984-ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில்தான் நடிகர் செந்தில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நகைச்சுவை நடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி திருமண நிகழ்வு பூஜை செய்தார். இது தொடர்பான புகைப்படங்க்ள் வைரலாகி வருகின்றனர்.

இதில் நடிகர் செந்தில், அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதி பிரபு மற்றும் குடும்பத்தினருடன்  கலந்துகொண்டனர். மேலும் கஜபூஜை, கோபூஜை செய்து  அம்பாளை வழிபட்டு  இரண்டுகால யாகசாலை பூஜையிலும் பங்கேற்றுள்ளனர்.

இந்த கோவிலில் தேவார பாடல் பெற்றதாகவும், அதனால் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் என்றும் மக்களின் ஐதீகமாக கொண்டுள்ளனர்.  எனவே அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் இந்த தலத்தில் 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து  அம்பாளை வழிபட்டால், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

எனவே இக்கோயிலில்  திருமண வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில்தான் நகைச்சுவை நடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி திருமண நிகழ்வு பூஜை செய்தார்.