பிரபல நடிகை மீது கொடூர தாக்குதல்.. வளர்ப்பு மகளால் நேர்ந்த விபரீதம்!

 

நடிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகளே தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன் லால் பட வசூலையே பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு ஒரு காலத்து கெத்து காட்டியவர் கவர்ச்சி கன்னி ஷகிலா. ஆரம்ப காலத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்த ஷகிலா, அதன் பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் தூள், வாத்தியார், பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகள் களமிறங்கியுள்ளார்.

ஷகிலா தற்போது சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள யுனைடேட் காலணியில் வசித்து வருகிறார். தனது அண்ணன் மகளான ஷீத்தலை 6 மாத கைக் குழந்தையாக இருந்தபோதில் இருந்து வளர்ப்பு மகளாக தத்தெடுத்து ஷகிலா வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஷகிலாவுக்கும் அவரது வளர்ப்பு மகள் ஷீத்தலுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஷகிலா மீது தாக்குதல் நடத்திவிட்டு ஷீத்தல் அருகிலுள்ள தனது சொந்தத் தாயின் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஷீத்தல் தன்னை தாக்கிவிட்டதாக தனது வழக்கறிஞர் சவுந்தர்யாவுக்கு ஷகிலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமாதானம் செய்து வைப்பதாகக் கூறி வீட்டுக்கு நேரில் வரும்படி ஷீத்தலுக்கு சௌந்தர்யா அழைப்பு விடுத்துள்ளார்.

இதனையடுத்து ஷகிலா வீட்டுக்கு வளர்ப்பு மகள் ஷீத்தல், அவரது அக்கா ஜமீலா, அவரது சொந்தத் தாயான சசி ஆகிய மூவரும் வந்துள்ளனர். வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கறிஞர் சௌந்தர்யாவை ஷீத்தல் அங்கிருந்த ட்ரேவால் தாக்கியதாகவும், மேலும் கையை கடித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன், ஷகிலா மீதும் ஷீத்தல் உள்பட மூவரும் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் காயமடைந்த சவுந்தர்யா சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சௌந்தர்யா அளித்த புகாரின் பேரில் ஷீத்தல், ஜமீலா மற்றும் சசி ஆகியோரிடம் கோடம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து யார் மீது தவறு என புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் ஷீத்தல் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவரும். ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகளே தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.