பிரபல நடிகரின் தாயார் திடீர் மரணம்.. சினிமா பிரபலங்கள் இரங்கல்

 

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்மாள் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

1978-ல் கமல் நடிப்பில் வெளியான ‘சட்டம் என் கையில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சத்யராஜ். ஆரம்ப காலத்தில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த இவர், கடலோரக் கவிதைகள், அண்ணா நகர் முதல் தெரு, வாழ்க்கை சக்கரம், நடிகன், அமைதிப்படை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது பரபரப்பான குணச்சித்திர நடிகராக கலக்கிக்கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துவருகிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஜாக்சன் துரை படத்தின் 2ம் பாகத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் அவரது மகன் சிபிராஜும் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் மன்றாடியார், வயது மூப்பின் காரணமாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவரின் குடியிருப்பில் நேற்று மாலை 4 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 94. தகவல் அறிந்து ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும் மற்றும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரண்டு மகள்களும் இருக்கின்றனர். நாதாம்பாள் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஆழ்த்தியுள்ள நிலையில், இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.