இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை.. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல்..

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017-ல் வெளியான ‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகிமானவர் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ரசிகர்கள் மத்தியில் யார் இந்த லோகேஷ் என்ற தேடல் உருவானது. அந்த படத்தை தொடர்ந்து அவரது அடுத்த படம் ‘கைதி’ படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து ரசிகர்களை மேலும் கவர்ந்தார். இதைத்தொடர்ந்து கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தை இயக்கி, மேலும் பட்டிதொட்டி எங்கும் லோகேஷ் கனகராஜை தெரியாத ஆட்கள் இருக்க முடியாது என்ற அளவுக்கு பெயர் பெற்றார். பெரும் வரவேற்பை பெற்ற இந்த படமானது ‘கைதி’ படத்துடன் இணைந்த கதையாக அமைந்துள்ளது. இதனால் 'லோகேஷ் சினிமட்டிக் யுனிவர்ஸ்' (LCU) என்று ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.

இதையடுத்து இவரது இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் வெளியான இந்த படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்றும், வெளிநாடுகளில் மட்டும் லியோ திரைப்படம் ரூ. 201 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் லியோ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுவில், லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் படங்களில் சட்ட விரோத செயல்கள், வாகனங்களை அதிவேகமாக இயக்குவது போன்ற காட்சிகள் மூலம் தவறாக வழிகாட்டுகின்றார். வன்முறையை தூண்டும் விதமாக காட்சிகள் எடுக்கிறார். இதனை தணிக்கை குழுவினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் லோகேஷ் கனகராஜுக்கு முறையான உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். இதுபோன்ற வன்முறையை தூண்டும் காட்சிகளை எடுப்பதற்காக அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றவியல் வழக்கு தொடர வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் மனுதாரரின் வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.