தூதன் வருவான்.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் குறித்து அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!!

 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகயுள்ள ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் தகவல் பகிர்ந்துள்ளார். 

கடந்த 2010-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. வெளியானபோது தோல்வியை தழுவிய இந்தப் படம் இன்றளவும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படம் தனுஷ் நடிப்பில் உருவாக விருப்பதாக சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இதன் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாமல் இருக்கிறது. இதனையடுத்து இந்தப் படம் கைவிடப்பட்டதோ என ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

இந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் என்ற பெயரில் கோவையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறார். இதனை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் தனுஷ் நடிக்கிறார். அந்தப் படம் நடந்தால் சந்தோஷப்படுவேன். செல்வராகவனிடம் அடுத்த பாகத்தின் கதையைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.