தாயாகிறார் தீபிகா படுகோன்.. செப்டம்பரில் குழந்தை.. இன்ஸ்டாவில் அறிவித்த ரன்வீர் - தீபிகா!

 

நடிகை தீபிகா படுகோன் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

2006-ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அதனைத் தொடர்ந்து 2007-ல்  ஃபாரா கான் இயக்கத்தில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமானார். பின்னர், சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் மறைந்த இர்ஃபான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் பிகு, ரன்பீர் கபூருடன் YJHD, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தி சினிமாவில் உச்ச நிலையை அடைந்தார். ஹாலிவுட் படமான XXX: Return of Xander Cage படத்திலும் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இருவரும் கோலாகலமாக இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் ரன்வீர், தீபிகா இருவருமே சினிமாவில் பிசியாக நடித்து வந்தனர். குறிப்பாக ஷாருக்கானுக்கு ஜோடியாக  தீபிகா படுகோனே கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று தீபிகா படுகோன் - ரன்வீர்சிங் இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கலாம் என கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி பரவியது. 77-வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது விழாவில் சிகப்பு கம்பளத்தின் மீது பளபளக்கும் சேலையை அணிந்திருந்த போது அவர் தனது வயிற்றுப்பகுதியை மறைத்ததாக கூறப்படுகிறது. தீபிகா படுகோன் தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ள செய்தி பரவியதும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வோக் சிங்கப்பூர் ஊடகத்துக்கு தீபிகா அளித்த பேட்டியில் தாய்மை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். ‘நிச்சயமாக ரன்வீரும் நானும் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த குடும்பத்தைத் தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறோம்’ என்று அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.