தங்கல் பட நடிகை திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

 

அமீர்கானுக்கு இரண்டாவது சிறுவயது மகளாக பபிதா குமாரி  நடிகை சுஹானி பட்நாகர் 19 வயதில் காலமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2016-ல் நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் மல்யுத்தத்தை கதைக்களமாக கொண்டு வெளியான படம் ’தங்கல்’. இந்தப் படம் இந்தி, தமிழ் உட்பட உலகத்தில் உள்ள பல மொழிகளிலும் வெளியாகி, உலகளவில் 2000 கோடி பாக் ஆஃபிஸ் கலெக்சனுடன் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக சாதனை படைத்தது.

அந்தப் படத்தில் பல திரைப்பட கலைஞர்கள் நடித்திருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திடமான காட்சியமைப்பை இயக்குநர் உருவாக்கியிருந்தார். அந்த வகையில் மஹாவீர் சிங் கதாபாத்திரத்தில் நடித்த அமீர்கானின் இரண்டு மகள்களும் சிறப்பான கதையமைப்பை கொண்டிருந்தனர். அதில் இரண்டாவது மகளாக வலம் வந்த பபிதா குமாரி கதாபாத்திரமும் எல்லோரின் கவனத்தையும் பெற்றிருந்தது.

அப்படி பபிதா குமாரியின் சிறுவயது கதாபாத்திரத்தில் கலக்கியிருந்த சுஹானி பட்நாகர் என்ற 19 வயது இளம்நடிகை, உடல்நலக்குறைவால் காலமாகியிருப்பது ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உடல்நலக்குறைவால் சுஹானி பட்நாகர் டெல்லியில் உயிரிழந்துள்ளார். அவருடைய மரணத்தை உறுதிசெய்திருக்கும் அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் இன்ஸ்டாகிராமில் இரங்கலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், “எங்களுடைய சுஹானியின் மறைவைக் கேட்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அவரது தாயார் பூஜாஜி மற்றும் முழு குடும்பத்தினருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் ஒரு திறமையான இளம் பெண் மற்றும் ஒரு வீராங்கனை, சுஹானி இல்லாமல் தங்கல் முழுமையடைந்திருக்காது. சுஹானி, நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் ஒரு நட்சத்திரமாக இருப்பீர்கள், உங்கள் ஆத்மா நிம்மதியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.