விஜய்யின் அரசியல் களத்திற்கு  போட்டியா? நடிகர் சரத்குமார் அதிரடி

 

அரசியலுக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் என நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அசோக்செல்வன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘நித்தம் ஒரு வானம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘போர் தொழில்’. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் குற்ற விசாரணை பின்னணியில் பரபரப்பான திரில்லராக உருவாகி உள்ளது.

இந்த படத்தை E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘போர் தொழில்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன், நடிகை நிகிலா விமல்,  இயக்குனர் விக்னேஷ் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய அசோக் செல்வன், வழக்கமாக போலீஸ் என்றால் மீசை வைத்துக் அதிரடியாக இருக்கும் போலீசை பார்த்திருப்போம்.  ஆனால் அதிலிருந்து மாறுபட்ட போலீஸ் அதிகாரியாக 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளேன். புதிய காவலரும், அனுபவம் வாய்ந்த காவலரும் எப்படி இணைந்து பணியாற்றுகிறார்கள்? எப்படி இந்த படத்தின் திருப்புமுனையை கண்டுபிடிக்கிறார்கள்? என்பதுதான் படத்தின் கதை. தன்னுடைய தெகிடி திரைப்படத்தை போன்ற சிறந்த படமாக போர் தொழில் இருக்கும் என அசோக் செல்வன் கூறினார்.

அதேபோல் சரத்குமார் பேசுகையில், இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். ஆனால் இந்த படத்தின் கதையை இயக்குனர் சொன்ன விதம் மிகவும் பிடித்திருந்தது.  இதுபோன்று யாரும் கதை சொன்னது கிடையாது என்பதை கூறிக் கொள்கிறேன் என தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமாரிடம், விஜய் அரசியல் நகர்வு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரத்குமார், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய் வந்தால் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.