சந்திரயான் 3 அனுப்புன முதல் ஃபோட்டோ.. பிரகாஷ் ராஜை வெளுத்துவாங்கிய நெட்டிசன்கள்!!

 

சந்திரயான் 3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்ட புகைப்படத்தால் நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பன்மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். சிறந்த குணச்சித்திர நடிப்புக்காக பெயர் பெற்ற பிரகாஷ் ராஜ் அடிக்கடி சமூகப் பிரச்சனைகள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பி வருகிறார். இவர் தொடர்ந்து பாஜக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியின் செயல்பாட்டை அவர் கடுமையாக சாடி வருகிறது. அதோடு இந்துத்துவா அமைப்பினரையும், அவர்களின் கொள்கைகளையும் பொது மேடைகளில் தாக்கி பேசி வருகிறார்.

இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தை ட்ரோல் செய்யும் வகையில் பதிவிட்டுள்ள புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் அதன் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. நிலவை நெருங்கி வரும் சந்திரயான் விண்கலம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் சந்திரயானின் பயணம் வெற்றியடைய பிரார்த்தனை செய்து வருகிறது.

இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரேக்கிங் நியூஸ் என பதிவிட்டு, வாவ்... நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என குறிப்பிட்டு, ஒருவர் டீ ஆத்தும் படியான கார்ட்டூன் இமேஜை பதிவிட்டுள்ளார். அவர் பிரதமர் மோடியை கிண்டலடிக்கும் நோக்கில் இதை பதிவிட்டிருந்தாலும், அதை சந்திரயானோடு ஒப்பிட்டு பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.