கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது.. ஒன்றிய அரசு அறிவிப்பு

 

கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு ஒன்றிய அரசால் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

ஒன்றிய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கெளரவிக்கிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக மறைந்த விஜயகாந்திற்கு ஒன்றிய அரசால் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிறந்த விஜயகாந்த் 1978-ல் இனிக்கும் இளமை படத்தின் மூலம் திரைப்பயணத்தை துவங்கினார். அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை அடைந்தனர். விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் தமிழ் திரைப்பட சங்க தலைவராகவும் இருந்துள்ளார்.

2005-ல் மதுரையில் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 2006-ல் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகினார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக பொதுவாழ்க்கையில் இருந்து விஜயகாந்த் விலகி இருந்தார். தொடர் சிகிச்சை எடுத்துகொண்டு இருந்த நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 28-ம் தேதி காலை விஜயகாந்த் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.