அப்பாவுக்கு சேது.. மகனுக்கு பைசன் காளமாடன்! மாரி செல்வராஜின் தென்மாவட்ட கபடி வீரன் கதை!!

 

சிவாஜி. எம்ஜிஆர், கமல், ரஜினி என இமயங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் கையால் திரையுலக்கிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் சியான் விக்ரம். பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் ஸ்டார் அந்தஸ்து பெறாமலேயே இருந்து வந்தார். அந்த நிலையில் பாலாவின் முதல்படமான சேது படத்தில் நடிப்பதற்கு தேர்வானார் விக்ரம். படத்தில் முதல் பாதியில் துடுக்கான வாட்டசாட்டமான இளைஞனாகவும் பிற்பாதியில் உடல்நலிந்து மனநிலை பாதிக்கப்பட்டவராகவும் நடித்திர்ந்தார் விக்ரம். உடலை மிகவும் வருத்திக்கொண்டு நடித்ததற்கான பலனையும் பெற்றார். சியான் விக்ரமாக தொடர்ந்து பல்வேறு வெள்ளிவிழாப் படங்களையும் தந்தார்.

விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதே படத்தை வேறு ஒரு இயக்குனர் மாற்றி அமைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியானது. அதற்கடுத்து பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார் துருவ் விக்ரம்.

இந்நிலையில் தன்னுடைய கனவுப்படமான பைசன் காளமாடன் படத்தில் துருவ் விக்ரமுக்கு வாய்ப்பளித்துள்ளார் மாரி செல்வராஜ். தென் மாவட்டத்தில் பிரபலமான கபடிப் போட்டியின் பின்னணியில் உருவான இந்தக் கதை கபடி வீரர் மணத்தி கணேசன் மற்றும் மாரி செல்வராஜின் வாழ்க்கைப் பின்னணியில் உருவானதாகும். மிகவும் சிக்கலான இந்தக் கதையில் நடிப்பதற்காக சுமார் இரண்டு ஆண்டுகள் கடுமையான உழைப்பைக் கொட்டி கபடிப் போட்டி வீரனாகவே வாழ்ந்துள்ளார் துருவ் விக்ரம்

அப்பாவுக்கு சேது வெற்றியைப் போல் துருவ் விக்ரமின் உழைப்பு பைசன் காளமாடன் படத்தை வெற்றி பெறச் செய்யும் என்று நம்பலாம்.