பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 

பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே ஆன பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் துவக்கம் முதலே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சிறப்பாக விளையாடி பைனலுக்கு நுழைந்துள்ளது.

இந்த போட்டியை பார்த்து தனது அணி வீரர்களை உற்சாகப் படுத்துவதற்காக, ஷாருக்கான் மற்றும் அவரது குழந்தைகள் - அப்ராம், சுஹானா, அனன்யா மற்றும் ஷனாயா ஆகியோர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இருந்தனர். அப்போது ஷாருக்கானுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் ஷாருக்கான் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரின் தீவிர ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஷாருக்கானின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ரசிகர்கள், திரையுலகினர் அச்சப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஷாருக்கான் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.