13 வயதில் தனக்கு பாலியல் சீண்டல்.. எட்டி உதைத்துவிட்டேன்.. ஓபனாக பேசிய யாஷிகா ஆனந்த்!

 

13 வயதில் பொது இடத்தில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.

2006-ல் ஜீவா - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் 2-வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்தார் யாஷிகா ஆனந்த். இவர் தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்த யாஷிகா, திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது, ஒரு பாடலுக்கு நடனமாடுவது என கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் மற்றும் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் அண்மையில் சில நொடிகளில் படம் வெளியானது. அந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய யாஷிகா நான் தல அஜித் ரசிகை என்றார். தொடர்ந்து யாஷிகா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பொது இடத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து பேசி உள்ளார். அதில், நடிகர் சந்தானத்துடன் இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தேன்.

அந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, எனக்கு ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்து தவறான இடத்தில் தொட்டான். அந்த வயதில் அது குட் டச்சா இல்ல பேட் டச்சா என்று கூட எனக்குத் தெரியாது. இருந்தாலும், உடனே நான் அப்படியே திருப்பி, எட்டி உதைத்துவிட்டேன். அவன் அப்படியே விழுந்துவிட்டான். நான் 13 வயதாக இருக்கும் போதே அப்படி செய்து இருக்கிறேன். பெண்களுக்கு தைரியம் தான் முக்கியம் என்று யாஷிகா ஆனந்த் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.