பொது விஷயமாக மாற்ற விரும்பவில்லை.. திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை டாப்ஸி

 

என்னுடைய திருமணத்தை பொது விஷயமாக மாற்ற விரும்பவில்லை என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

2010-ம் ஆண்டு வெளியான ‘ஜும்மண்டி நாதம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி பண்ணு. அதனைத் தொடர்ந்து, 2011-ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி படத்தில் நடித்திருந்தார். இதனிடையே கதை திரைக்கதை வசனம் இயக்கம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ஜெயம் ரவியின் ‘ஜன கன மன’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. இவர், டென்மார்க்கை சேர்ந்த பாட்மிண்டன் பயிற்சியாளர் மத்யாஸ் போ என்பவரைக் கடந்த 10 வருடங்களாகக் காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் திருமணம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சில திரைபிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நடிகை டாப்ஸி, திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பொது வெளியில் சொல்ல வேண்டுமா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல.

என்னுடைய திருமணத்தை பொது விஷயமாக மாற்ற விரும்பவில்லை. காரணம், அது பொது வெளியில் எப்படி உள்வாங்கிக் கொள்ளப்படும் என்பது குறித்து நான் கவலைப்படுகிறேன். அதனால் தான் எதையும் பொது வெளியில் அறிவிக்க வேண்டும் என நினைக்கவில்லை. அதற்கு நான் முதலில் மனதளவில் தயாராகவில்லை என்பது தான் உண்மை. என்னுடன் உண்மையாக நெருக்கமாக இருக்கும் நபர்கள், திருமணத்தில் கலந்துகொண்டனர்” என்று கூறினார்.