நடிகை ரோஜாவுக்காக களமிறங்கிய கணவர்.. ஆந்திர அரசியலில் பரபரப்பு!

 

மனைவி ரோஜாவுக்காக ஆந்திர அரசியலில் அவருடைய கணவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி களமிறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ரோஜா, 90-களில் இளைஞர்களின் இதையத்தை கொள்ளையடித்த முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ரஜினி, சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தது மட்டுமின்றி, அவர் நடித்த உழைப்பாளி, அதிரடிப்படை, சூரியன், வீரா உள்பட பல படங்கள் வெற்றியை அள்ளி தந்தன.

கதாநாயகியாக நடித்த காலங்கள் மாற நடிகை ரோஜா அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் கடந்த 1999-ம் ஆண்டு இணைந்தார். அந்த கட்சியின் தெலுங்கு மகிளா அணி தலைவராக இருந்த நடிகை ரோஜா 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

அதன்பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய நடிகை ரோஜா, பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா, வெற்றி பெற்ற நடிகை ரோஜா எம்எல்ஏவானார். தற்போது அம்மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக ரோஜா உள்ளார்.

மனைவியின் அரசியல் வாழ்க்கைக்கு அவர் உறுதுணையாக இருந்து வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் ஆந்திர அரசியலில் நேரடியாக தலையிடுவது இல்லை. இந்த நிலையில் இயக்குநர் செல்வமணி ஆந்திர அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ளார். ஆந்திர மாநிலம் நகரியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில்தான் செல்வமணி கலந்து கொண்டார். ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். மக்களின் மகிழ்ச்சி இப்படியே தொடர வேண்டுமானால் ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என பேசினார். இதன் மூலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே.செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார். இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் அடுத்த தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை தக்க வைக்கும் என நடிகையும் அமைச்சருமான ரோஜா தெரிவித்து வருகிறார். மேலும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறைக்கு சென்றதால் ரோஜா பட்டாசு வெடித்து கொண்டாடினார். இதற்காக தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி பண்டாரு சத்யநாராயணன் , ரோஜா நிர்வாண படங்களில் நடித்தவர் என பெண் என்றும் பாராமல் விமர்சித்திருந்தார். இதற்கு நடிகைகள் ராதிகா, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து ரோஜாவுக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.