நடிகை அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள்.. உண்மை நிலவரம் என்ன?

 

நடிகை அமலா பாலுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது.

2009-ல் வெளியான ‘நீலதாமரா’ படத்தின் மூலம் மலையாள சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து, 2010-ல் வெளியான ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அமலா பாலின் பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் புரோபோஸ் செய்த, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட அவை படு வைரலானது. மேலும் தன்னுடைய காதலன் புரோபோஸ் செய்த ஒரே வாரத்தில் அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

அமலாபால் ஜெகத் தேசாய் ஜோடிக்கு திருமணமான இரண்டே மாதத்தில் அமலா பால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் அறிவித்தார். கர்ப்பமாக இருந்தபோது சினிமா புரமோஷன்களிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் அமலா பால். சமீபத்தில் பிருத்விராஜ் ஜோடியாக அவர் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால், அவ்வப்போது கர்ப்பகால போட்டோஷூட்டையும் நடத்தி அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இதனிடையே நேற்று மாலையில் நடிகை அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக செய்திகள் உலா வர தொடங்கின. இதனால் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் உண்மையில் அமலா பாலுக்கு இன்னும் குழந்தையே பிறக்கவில்லையாம். இதன்மூலம் இணையத்தில் அவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக பரவி வரும் தகவல் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.