நடிகர் விஜய்க்கு ரூ.1 கோடி அபராதம்.. அவகாசம் கேட்ட விஜய்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-17 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. 

அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக் கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்கான ரூ.1.50 கோடி அபராதம் விதித்து கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எனவே காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, வருமானவரித்துறை சார்பில் அபராதம் ஏன் விதிக்கப்பட்டது என்பதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.