சந்திரமுகி 2 படத்தின் வெற்றிக்காக பழனியில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்..!

 

சந்திரமுகி - 2 இன்று வெளியான நிலையில், பழனி முருகன் கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் செய்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் ‘சந்திரமுகி’. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘சந்திரமுகி’ பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது.

இந்த நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் பி.வாசு இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர்.ஜி.ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் விநாயகர் சதுர்த்தி விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப காரணமாக வெளியீட்டை இன்று (செப். 28) படக்குழு தள்ளிவைத்தது.

சந்திரமுகி - 2 இன்று வெளியான நிலையில், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி சன்னதிக்கு சென்று முருகப்பெருமானை மனமுருக வேண்டினார்.

இதைத்தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் உள்ள போகர் சித்தர் சன்னதிக்கு சென்று, சுமார் 10 நிமிடம் தியானம் செய்து வழிபட்டார். அப்போது அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து மின்இழுவை ரெயில் வழியாக அடிவாரம் வந்து, கிரிவீதியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்துக்கு சென்று வழிபட்டார். டிகர் ராகவா லாரன்சுடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர்.