நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம்.. போக்குவரத்து காவல்துறை அதிரடி!

 

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறினார். இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் வசிக்கும் தனுஷின் மகன்கள் இருவரும் தனுஷ் வீட்டிலும் ரஜினி வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், சமீபத்தில் தனுஷின் வீட்டுக்கு வெளியே அவரது மூத்த மகன், அதிகவேக சூப்பர் பைக் ஒன்றை ஓட்டக் கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. 17 வயதாகும் அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதை சமூக வலைதளங்களில் பலரும் கண்டித்தனர்.

இதனையடுத்து, தனுஷின் வீட்டுக்குச் சென்ற போக்குவரத்து போலீஸார், தனுஷின் மகனுக்கு ரூ.1,000 அபராதம் அபராதம் விதித்தனர். இந்த விவகாரத்தில் தனுஷின் மகன் அவரது வீட்டுக்கு பக்கத்திலேயே பைக் ஓட்டக் கற்றுக் கொள்வது தவறா என்று அவருக்கு ஆதரவாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.