மயில் போல பொண்ணு ஒன்னு.. பிரபல பாடகி பவதாரணி மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்!

 

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 47.

1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் பவதாரிணி. அதன் பின் 1995-ல் வெளியான ‘ராசய்யா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

தன்னுடைய மயக்கும் குரலால் ஏராளமான ரசிகர்களை பெற்ற பவதாரிணி, கடந்த 2001-ம் ஆண்டில் ‘பாரதி’ படத்திற்காக பவதாரணி பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து மனம் மயக்கும் ஏராளமான பாடல்களை பாடிவந்த பவதாரணி, கடந்த 2002-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

தொடர்ந்து, ‘பிர் மிலேங்கே’ (இந்தி), ‘அமிர்தம்’, ‘இலக்கணம்’, ‘மாயநதி’ படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று மாலை 5.20 மணி அளவில் இலங்கையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் நாளை (ஜன. 25) மாலை சென்னை கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான வாய்சிற்கு சொந்தக்காரரான பவதாரணி இந்த இளம் வயதில் உயிரிழந்தது குறித்து பலரும் தங்களது வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர்.