அதிர்ச்சி! பழம்பெரும் பிரபல கதாசிரியர் மரணம்... திரையுலகினர் இரங்கல்

 

பழம்பெரும் கதாசிரியர் பாலமுருகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.

தமிழ்த் திரையுலகில் பாடல்கள் ஆக்கிரமிப்பு செய்த காலம் முடிந்து. வசனத்தைக் கொண்டு தமிழ்ப் படங்களை வெற்றிப் படமாக்க முடியும்  என்ற காலச்சக்கரத்தை வசனகர்த்தா இளங்கோவன் ஆரம்பித்து வைக்க பின் அறிஞர் அண்ணா, ஏ.எஸ்.ஏ. சாமி, கலைஞர் கருணாநிதி, ஏ.பி. நாகராஜன், ஜாவர் சீதாராமன் போன்றோர் பின் தொடர்ந்தனர்.

இந்தக் காலகட்டத்தில் வசனங்களுக்காகவே தமிழ்ப் படங்கள் பேசப்பட்டன. அந்த வரிசையில் போடிநாயக்கனூரை சொந்த ஊராகக் கொண்ட கதாசிரியர் பாலமுருகனும் இணைந்து கொண்டார். நாடகங்களை எழுதி தயாரித்து தென் மாவட்டங்கள் முழுவதும் அரங்கேற்றியவர். சிவாஜி மீது அதிக பற்று கொண்டவர். பாலமுருகனின் நாடகங்களில் சமூகத்திற்கு தேவையான கருத்துகள் அதிகம் எதிரொலிக்கும். இவர் எழுதிய நாடகங்களில் சிவாஜி நடித்துள்ளார்.

சிவாஜி நடிக்கும் படங்களுக்கு கதை-வசனம் எழுத வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை ‘அன்புக்கரங்கள்’ என்ற படத்தின் மூலம் நிறைவேறுகிறது. அதன் பிறகு ‘பட்டிகாடா பட்டணமா’, ‘ராஜபார்ட் ரங்கதுரை’, ‘வசந்த மாளிகை’ என்று சிவாஜி நடித்த ஒரு டஜன் படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ளார். முதல் படமான அன்புக்கரங்களிலே தன் வசன முத்திரையை அழுத்தமாக பதித்திருப்பார்.

மேலும் தனது 40 ஆண்டுகால சினிமா பயணத்தை, ‘நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்’ என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.