பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை தூக்கிட்டுத் தற்கொலை!! அதிர்ச்சியில் திரையுலகம்

 

கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறார். தசாவதாரம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடித்தும் இருக்கிறார்.

சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, திருப்பூர் குமரன் தெருவில் வசித்து வருகிறார்  கபிலனுன். இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு தூரிகை (28) என்ற மகள் இருந்தார். இவர், எம்.பி.ஏ. படித்து முடித்து விட்டு 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

நேற்று வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற தூரிகை திடீரென தூக்குப்போட்டு கொண்டார். மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த உஷா அலறினார். உடனடியாக தூரிகையை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தூரிகை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார், தற்கொலை செய்த தூரிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தூரிகையை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கபிலனின் மகள் தூரிகை ஆடை வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து வந்தார். இவர் 'Being Women Magazine' எனும் இதழையும், 'The Label Keera' எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் நடத்தி வந்தார். இந்நிலையில், அவர் சற்று முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.