பிரபல பெங்காலி இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி!!

 

பிரபல பெங்கலி இயக்குநர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்காலி சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் தருண் மஜூம்தார் (92). இவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அதில் 'பாலிகா பாது', 'ஸ்ரீமான் பிருத்விராஜ்', 'தாதா கீர்த்தி', 'வல்பசா வல்பசா', 'ஆலோ' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

இவர், 4 தேசிய விருதுகள், 7 பிஎஃப்ஜெஏ விருதுகள், 5 பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஒரு ஆனந்தலோக் விருதுகளைப் பெற்றுள்ளார். 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ‘அதிகார்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி இருந்தார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டதையடுத்து கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை காரணமாக அவருக்கு அங்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவர் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மேற்கு வங்க முதல்வர் இன்று மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

அவர் விரைவில் நலம் பெற ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.