பிரபல நடிகர் கொலை முயற்சி.. கடன் கொடுத்தவர் மருத்துவமனையில் அனுமதி!!

 

கேரளாவில் நடிகர் ஒருவர் கைது செய்யபட்ட சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே புத்தன்பீடிகா பகுதியில் வசித்து வருபவர் பிரபல மலையாள நடிகர் வினீத் தட்டில் டேவிட். இவர், சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும், ஆடு 2, அங்கமாலி டைரிஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இவர் ஆலப்புழை, துராவூரைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரிடம் 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ. 3 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். மீதமுள்ள ரூ. 3 லட்சத்தை திருப்பி கேட்க, நடிகர் வினீத் வீட்டிற்கு அலெக்ஸ் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த வினீத் வீட்டில் இருந்த வாளால், அலெக்சை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அலெக்சை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ள அந்திகாடு போலீசார், நடிகர் வினீத் தட்டில் டேவிட்டை கைது செய்துள்ளனர். நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.