நடிகை ஜீவிதா மீது மீண்டும் மோசடி புகார்

 

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஜீவிதா நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் வசிக்கிறார். ராஜசேகர், பூஜா குமார் நடித்த ‘கருட வேகா’ படத்தை தயாரித்த கோட்டீஸ்வர ராஜூ, “ஜீவிதாவும், ராஜசேகரும் ரூ.26 கோடி கடன் பெற்று மோசடி செய்து விட்டதாகவும், அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன்” என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த குற்றச்சாட்டை ஜீவிதா மறுத்தார். கருட வேகா படத்துக்கு கோட்டீஸ்வரராஜூ தான் தயாரிப்பாளர். பிறகு அவர் எப்படி எங்களுக்கு கடன் கொடுத்து இருக்க முடியும். வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்றார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் கோட்டீஸ்வரராஜூ மீண்டும் ஜீவிதா மீது குற்றம் சாட்டி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்,

“ஜீவிதா பண ஆசை பிடித்தவர். கெஞ்சி கடன் கேட்டார். நடிகர் ராஜசேகரின் தந்தை எனக்கு மிகவும் தெரிந்தவர். அதனால் பணம் கொடுத்தேன். என்னைப்போல பல தயாரிப்பாளர்களை ஜீவிதா ஏமாற்றி இருக்கிறார். ராஜசேகருக்கு பணம் தேவையில்லை. ஆனால் ஜீவிதாவிற்கு பணம் தேவை. நாங்கள் லண்டனில் இருந்து வந்தவர்கள் அவ்வளவு சுலபமாக ஏமாற மாட்டோம்.” என்றார்.