தாயுமானவன்! தகப்பன் தாயுமாய் ஆனவன்!!
உலகில் மொத்த ஆண்களில் சிறந்த
உண்மைக்காரன்.
ஊர் பாராட்ட மனதுக்குள் மார்தட்டி மகிழும்
ஆசைக்காரன்
கண்ணீரைக் கண்டவுடன் கலங்கி் நிற்கும்
பாசக்காரன்
சிரிக்கும் அழகில் தன்னை மறந்து தாயாகும்
தாய்மைக்காரன்.
நோயுண்டால் உண்ணாது உறங்காது வலித்திருக்கும்
உணர்வுக்காரன்
பேசாமல் போனால் பித்தாகிக் கெஞ்சும்
கொஞ்சல்காரன்
வளர்ந்து நின்ற நாள்களில் நட்பாய் மாறிய
நட்புக்காரன்.
பிரிவால் வருந்தினாலும் வாழ்க சொல்லும்
வாழ்த்துக்காரன்.
துன்பம் தன் தோள் தாங்கி இன்பம் தரும்
வலிமைக்காரன்.
தவறென்றால் திருத்தச் சொல்லி உணர்த்தும்
கண்டிப்புக்காரன்.
மகளென்னை மகனென்ன உயிரென்று வளர்த்தெடுத்த
உன்னதக்காரன்
முகம் வாடிய போதெல்லாம் வாடிப்போய் ஓடிவரும்
பண்புக்காரன்
இப்படி வாழும் அப்பங்காரன்களுக்கு
நன்றி் சொல்லிக் கொண்டாட நாள் எதற்கு?
வாழும் வாழ்வும், வளமும் தந்துவிட்டு
தளர்ந்து வாடினாலும் “நீ நல்லா இருந்தாப் போதும்” என வாழ்த்தும் உள்ளத்திற்கு
அன்பை அள்ளித்தருவோம் எந்நாளும்
தாயுமானவர்களுக்கு.
– முனைவர். சித்ரா மகேஷ், யு.எஸ்.ஏ.