வாயில் நுரை தள்ளி இறந்த இருவர்.. தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் பயங்கரம்!!
தஞ்சாவூரில், டாஸ்மாக் மதுபான பாரில், மது குடித்த இரண்டு பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் கடை எண் 8123 அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை திறப்பதற்கு முன்பே கடையின் அருகே உள்ள இருந்த மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கடை முன்பு மது அருந்திய கீழவாசல் படைவெட்டி அம்மன்கோவில் தெரு சேர்ந்த முதியவர் குப்புசாமி திடீரென வாயிலிருந்து நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். அங்கு கொண்டு செல்லப்பட்ட குப்புசாமி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதேபோல், பூமால் ராவுத்தர் கோயில் தெருவை சேர்ந்த விவேக் என்ற 36 வயது இளைஞரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மதுபான வட்டாட்சியர் பிரபாகரன் ஆய்வு செய்து வெளியே வரும்போது அங்கிருந்த கூடிய இருந்த பொதுமக்கள் மதுபான கடையில் உள்ளே தள்ளி வைத்து சிறை பிடித்தனர். மேற்பார்வையாளர் முருகன் மீது லேசான தாக்குதல் நடத்தினர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வட்டாட்சியர் வெளியே வந்தார். தொடர்ந்து பாஜகவினர் கடை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கள்ள மதுபான பாட்டில்களை எடுத்து பொதுமக்களிடம் காட்டினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஆய்வு மேற்கொண்டு சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் தஞ்சாவூர் பொறுப்பு கோட்டாட்சியர் பழனிவேல் ஆர்டிஓ தலைமையில் மது மாதிரிகளை பாரில் இருந்து சேகரித்து எடுத்து சென்றனர்.
இதனிடையே உயிரிழந்த 2 பேரின் மரணத்திற்கு காரணம் சயனைடு தான் என தகவல் வெளியானது. அவர்கள் 2 பேரின் உடற்கூறாய்வில் முதற்கட்ட அறிக்கையின் படி அவர்களின் உடலில் சயனைடு கலந்திருந்ததும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.